செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015



புகழ்பெற்ற இத்தாலிய அமெரிக்க எழுத்தாளர் மரியோ புசோ 15 அக்டோபர் 1920ம் வருடம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு புலம்பெயர்ந்த படிப்பறிவில்லாத ஏழை குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே நூலகங்களில் பல்வேறு இலக்கிய நூல்கள் படிப்பதில் தனது நேரத்தை அதிகமாக செலவழித்தார்பட்டப்படிப்பை முடித்தப்பின் இரண்டாம் உலகப்போர் நடைபெற்று கொண்டிருந்த அந்த நாட்களிலே அமெரிக்க ராணுவத்திலே சேர சென்றவருக்கு பார்வை குறைபாடு காரணமாக போரில் நேரடியாக ஈடுபட முடியாமல் போகவே அவரை ஜெர்மன் நாட்டின் பொது உறவுகள் அதிகாரியாக நியமித்தது அமெரிக்க ராணுவம். போர் முடிந்த பின் மீண்டும் ஜெர்மனியில் இருந்து அமெரிக்கா திரும்பியவர் எழுத்துலகிற்கு அறிமுகமானார் அவர் முதன் முதலாக எழுதி வெளியானது தி லாஸ்ட் கிறிஸ்மஸ் என்ற சிறு கதை. பின்னர் பல்வேறு பத்திரிகைகளில் எழுத்தாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றி கொண்டே நாவல்கள் எழுதத் தொடங்கினார். அவரின்  முதல் இரண்டு நாவல்களும் சிறந்த விமர்சனங்களை பெற்றாலும் அந்த புத்தங்களின் மூலம் புசோவுக்கு போதிய வருமானம் சேர்ந்திடவில்லை.



தனது நிதி நிலைமை சரியில்லாத காரணத்தினால் தான் எழுதி கொண்டிருந்த மூன்றாவது நாவலுக்கு சரியான தலைப்பை கூட யோசித்திராத நிலையிலும் எழுதி கொண்டிருந்த ஆரம்ப கட்டத்திலையே நாவலை திரைப்பட கம்பெனிக்கு விற்கும் முயற்சியில் இறங்கிவிட்டார் புசோ, 60 பக்கங்கள் வரை எழுதிய நிலையில் அதை பாரமவுண்ட் பிக்சர்ஸின் தலைமை அதிகாரியான ராபர்ட் எவான்ஸிடம் காட்டுவதற்காக அவரது அலுவலகம் வந்தார். அதுவோ பாரமவுண்ட் பிக்சர்ஸ் சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த நாட்கள். எவான்ஸிர்க்கு புசோ கொண்டு வந்திருந்த 60 பக்கங்களை மட்டுமே கொண்ட அந்த கதையின் மேல் எந்த நம்பிக்கையும் வந்து விடவில்லை இருப்பினும் எவான்ஸ் புசோ விடம் மிகக் குறைந்தளவு தொகையை பெற சம்மதித்தால் கதையை திரைப்படமாக எடுப்பது பற்றி யோசிப்பதாகவும் வேண்டுமானால் ஒரு சிறிய தொகையை கூடதலாக தருவதாக பேரம் பேசினார் நாவல் புத்தகமாக வெளி வந்தால் நிச்சயம் அதிக விலை தருவதாகவும் கூறினார். வேறு வழியின்றி புசோவும் குறைந்த வியாபரத்திற்கு ஒத்து கொண்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. புசோ கொடுத்த பக்கங்களில் ஒன்றை கூட படிக்காமல் அப்படியே அதை பாரமவுண்ட்டின் வணிக துறைக்கு அனுப்பி வைத்தார் எவான்ஸ். சிலமாதங்கள் கழிந்து எவான்ஸிர்க்கு புசோவிடம் இருந்து அழைப்பு வந்தது புசோ யாரென்றே மறந்துவிட்ட நிலையில் இருந்தார் எவான்ஸ். அவரிடம் புசோ நான் எனது புத்தகத்தின் தலைப்பை மாற்றினால் அது ஒப்பந்த மீறலாக கருதப்படுமா என்ற கேள்வியை எழுப்பினார். இதை கேட்ட எவான்சிர்க்கு அந்த சமயத்தில் சிரிப்பதை தவிர வேறேதும் வழியில்லை. புசோ கூறிய அந்த தலைப்பு தான் தி காட் ஃபாதர்.


முன்னர் வெளியாகியிருந்த புசோவின் இரண்டு புத்தங்களின் பின்னடைவும் எந்த வித சோர்வையும் தந்திடவில்லை இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீவிர முயற்சியில் மேலும் எழுதத் தொடங்கினார் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான தளத்தில் பயணப்பட்டார் இதற்கு முன் பத்திரிகைகளுக்காக எழுதிய மாஃபியாக்கள் பற்றிய உண்மை சம்பவங்களின் அடிப்படையிலும் தான் சந்தித்த நிழல் உலக மாஃபியாக்களின் உண்மை கதாபாத்திரங்களையும் கொண்டு ஒரு சிறந்த படைப்பு உருவானது, மூன்றாவதாக அவர் எழுதிய அந்த நாவல் தான் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. எஸ். நீல் புஜிதா என்பவர் பொம்மலாட்டத்தை மையப்படுத்தி புத்தகத்தின் அட்டை படத்தை வடிவமைத்தார். ஜி.பி. புட்னம்ஸ் சன்ஸ் என்ற புத்தக வெளியிட்டாளர் மூலம் புத்தகம் 1969ம் ஆண்டு வெளியானது. நாவலில் நியூயார்க் நகரில் வசிக்கும் ஒரு இத்தாலியன் மாஃபியா குடும்பத்தின் கதையை விரிவாக விளக்கியிருந்தார் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அன்றைய மாஃபியாக்களின் மாதிரியாகவே படைத்தார். அதுவரை வெளியில் இருந்தே சொல்லப்பட்ட மாஃபியா கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மாஃபியாக்களின் குடும்பத்தை சுற்றி நாவல் அமைந்ததால் வாசகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 10 மில்லியன் பிரதிகளை தாண்டியும் விற்பனையில் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து 67 வாரங்களாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் சிறந்த புத்தகமாக முதலிடத்தில் வலம் வந்தது.


4 கருத்துகள்: